

உயிரினும் மேலான இறைத் தூதர் மீதான அவதூறுகளைக் கண்டு நபியவர்கள் மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய எதிர்ப்புகளில், காழ்ப்புணர்வுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பொதுமக்கள் எவ்வகையிலும் துணுக்குறக் கூடாது என்றும் - வெறுமனே உணர்ச்சிவசப் படல்களுக்கு இடம் கொடுக்காமல், இன்றைய சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? ஆற்ற வேண்டிய எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims) என்ற தலையங்கத்தில் பட்டியலிட்டிருந்தோம்
மேற்கண்ட தலையங்கத்தில், ஒவ்வொரு முஸ்லிமின் சொல்லிலும், செயலிலும் நபி(ஸல்) காட்டித் தந்த இஸ்லாம் சுகந்தமாய் வீசி "அழைப்பு" தர வேண்டும் என்று வேண்டுகோளிட்டிருந்தோம். இத்தகைய சுகந்தத்தை தினசரி சந்தித்துப் பேசும் நட்பு வட்டாரத்தில், அண்டை வீட்டார்களிடத்தில், அலுவலக வட்டத்தில், வியாபார நிறுவனங்களில் என தினசரி பரவச் செய்து கொண்டிருக்கும் தூய எண்ணம் கொண்ட சகோதர சகோதரிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
ஓட்டமும் நடையுமாக இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களிடையே அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்படும் இத்தகைய அழைப்புப் பணிகளில் அன்பளிப்பாக தருவதற்கென்றே ரத்தினச் சுருக்கமாக, இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பற்றி சுருக்கக் கையேடு ஒன்றினைத் தமிழில் தயாரித்து இணையத்தில் பரவச் செய்திருக்கும் ஓர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
இக் கையேட்டினை பிரதி எடுத்து பிற மத நண்பர்களுக்கு விநியோகிக்கலாம். இயலாதோர் மின் அஞ்சலில் அனுப்பலாம். அனுப்பித் தந்த கையோடு சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படிக்கக் கோருங்கள்.. இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்?" என்ற கேள்விக்கு அவர்களின் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...
இப் பிரசுரத்தை அழகிய முறையில் அமைத்திருக்கும் இஸ்லாமியப் பெண்மணி தளத்தினருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் தெரிவித்துக் கொள்கிறோம். கூடுதல் தகவல்கள் மற்றும் அச்சிட்ட பிரசுரங்களைப் பெற்றுக் கொள்ள admin@islamiyapenmani.com எனும் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்