வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

முஹம்மத் - யார் இவர்?

இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய உலக மக்களின் தேடல்கள் அதிகரிப்பதையும், அதன் மூலம் உண்மையை உணர்ந்து, தெளிந்து, முன்பை விட கூடுதல் அளவில் இஸ்லாத்தைத் தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் புள்ளி விபரங்கள் பறை சாற்றிக் கொண்டே இருக்கின்றன.
இவ்வகையில், உலகமெங்கும் முஸ்லிம்கள் இம் மனிதரை ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தன? என்ற பிற மத சகோதரர்களின் புருவ உயர்த்தல்களுக்கு விடை தரும் அவசியங்கள் அழுத்தமாக பல இஸ்லாமிய அழைப்பு மையங்களுக்கு ஏற்பட்டு, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுள்ளன.

உயிரினும் மேலான இறைத் தூதர் மீதான அவதூறுகளைக் கண்டு நபியவர்கள் மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய எதிர்ப்புகளில், காழ்ப்புணர்வுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பொதுமக்கள் எவ்வகையிலும் துணுக்குறக் கூடாது என்றும் - வெறுமனே உணர்ச்சிவசப் படல்களுக்கு இடம் கொடுக்காமல், இன்றைய சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? ஆற்ற வேண்டிய எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims) என்ற தலையங்கத்தில் பட்டியலிட்டிருந்தோம்

மேற்கண்ட தலையங்கத்தில், ஒவ்வொரு முஸ்லிமின் சொல்லிலும், செயலிலும் நபி(ஸல்) காட்டித் தந்த இஸ்லாம் சுகந்தமாய் வீசி "அழைப்பு" தர வேண்டும் என்று வேண்டுகோளிட்டிருந்தோம். இத்தகைய சுகந்தத்தை தினசரி சந்தித்துப் பேசும் நட்பு வட்டாரத்தில், அண்டை வீட்டார்களிடத்தில், அலுவலக வட்டத்தில், வியாபார நிறுவனங்களில் என தினசரி பரவச் செய்து கொண்டிருக்கும் தூய எண்ணம் கொண்ட சகோதர சகோதரிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
ஓட்டமும் நடையுமாக இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களிடையே அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்படும் இத்தகைய அழைப்புப் பணிகளில் அன்பளிப்பாக தருவதற்கென்றே ரத்தினச் சுருக்கமாக, இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பற்றி சுருக்கக் கையேடு ஒன்றினைத் தமிழில் தயாரித்து இணையத்தில் பரவச் செய்திருக்கும் ஓர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
இக் கையேட்டினை பிரதி எடுத்து பிற மத நண்பர்களுக்கு விநியோகிக்கலாம். இயலாதோர் மின் அஞ்சலில் அனுப்பலாம். அனுப்பித் தந்த கையோடு சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படிக்கக் கோருங்கள்.. இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்?" என்ற கேள்விக்கு அவர்களின் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...


















































இப் பிரசுரத்தை அழகிய முறையில் அமைத்திருக்கும் இஸ்லாமியப் பெண்மணி தளத்தினருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் தெரிவித்துக் கொள்கிறோம். கூடுதல் தகவல்கள் மற்றும் அச்சிட்ட பிரசுரங்களைப் பெற்றுக் கொள்ள admin@islamiyapenmani.com எனும் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்






இஸ்லாம் மார்க்கத்தின் இறைத்தூதர்கள்!

இஸ்லாம் எனும் இறைமார்க்கம் ஆதி முதல் இறுதி வரை ஒரே இறைவனை வணங்கும் வழிபாட்டு முறையைத்தான் மக்களுக்கு போதித்து வந்தது. ஆதி (நபி) ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி (நபி) முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மக்களுக்குப் பிரச்சாரம் செய்தது, ''ஒரே இறைவனை வணங்குங்கள்'' என்ற ஏகத்துப் பிரச்சாரத்தையே முன் வைத்தார்கள். இதில் எந்த இறைத்தூதரும் மாற்றம் செய்யவில்லை.


மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்!

ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கும், அவனுக்குக் கீழ்படிந்து நடப்பதற்கும், இறைவனைப் பற்றிய உண்மைகள், மற்றும் அவனது தனித் தன்மைகள், அவனுக்கு விருப்பமான வழிமுறைகள், இவ்வுலக வாழ்க்கை - அதாவது பரீட்சை வாழ்க்கையின் வெகுமதியையும் அல்லது தண்டனையைப் பெறவிருக்கும் மறுமை வாழ்க்கையைப் பற்றியத் தெளிவான அறிவை - ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதை ஒவ்வொரு மனிதனும் சுயமாக முயற்சி செய்து இறைவனைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது இயலாத காரியம். அப்படி இறைவனை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்கள் எவரும் ஒரேக் கருத்தில் இல்லை, மாறாக இறைவனைப் பற்றிய ஒவ்வொரு தனி மனிதனின் கருத்தும் வெவ்வேறாகவே இருக்கிறது என்பது கண்கூடு.

தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் வழியாக வேதவெளிப்பாட்டின் (வஹீ) மூலம் மக்களுக்கு இறைச் செய்தியை சமர்ப்பிக்கும்படி இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டான். ஒவ்வொரு சமுதாயத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இறைத்தூதர்களுக்கும் இது பொதுவாக இருந்தது. அதனால் உண்மையான இறைத்தூதர்களை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் பொதுமக்கள் மீது இருக்கிறது.

உண்மையான இறைத்தூதர்.
தன்னை இறைத்தூதர் என அறிமுகம் செய்து கொண்ட எவரும் உடனடியாக இவர் இறைத்தூதர்தான் என்று எற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக இவர் உண்மையான இறைத்தூதர் தானா? எனச் சுண்டிப் பார்க்கப்பட்டார்கள், சோதிக்கப்பட்டார்கள், இதற்கான உரை கல்லாக முந்தைய வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என முந்தைய இறை வேதங்களோடு உரசிப்பார்த்தும் ஏற்றுக் கொண்டார்கள். மறுத்தவர்கள் காழ்ப்புணர்ச்சியாலும், பகைமையினாலும் மறுத்தார்கள் என்பதற்கான சான்றுளையும் வரலாற்றில் காண முடிகிறது.

இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்த போது மக்காவின் அனைத்து சமூக மக்களும் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தார்களென்றால் மிகக் கடுமையான வன்முறைச் செயல்களால் எதிர்த்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் என அறிமுகம் செய்வதற்கு முன்பு உண்மையாளர், நேர்மையாளர் என்று முஹம்மது (ஸல்) அவர்களைப் போற்றி புகழ்ந்த அதே மக்காவாசிகள், முஹம்மது (ஸல்) அவர்கள் 40ம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிமுகம் செய்து கொண்டபோது, இவர் பொய்யர், சூனியம் செய்யப்பட்டவர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் சொல்லி மக்கா வாழ் சமூகத் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஊர் விலக்கும் செய்யப்பட்டிருந்தார்கள். இப்படி 13 ஆண்டுகள் தொடர்ந்து வன்முறைச் செயல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

ஆனாலும் கொள்கையில் எந்த தளர்த்தலும் இல்லை. இதற்கிடையில் எதிரிகளால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விலை பேசப்பட்டார்கள் அப்போதும் கொண்ட கொள்கையில் எவ்வித
மாற்றமும் இல்லை என்று மறுத்து விட்டார்கள். மட்டுமல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள்...

பிறருக்கு என்ன போதித்தாரோ அதன்படி தாமும் வாழ்ந்து காட்டினார்!

தான் சொன்ன விஷயத்துக்கு மாறாக நடந்து கொண்டதாக சின்ன எடுத்துக் காட்டு கூட அவர் வாழ்வில் இல்லை!

அவரது சொல்லிலும் செயலிலும் எந்த விதமான மாறுதலும் இருந்ததில்லை!

அவர் மற்றவர்களின் நன்மைக்காகக் கஷ்டப்படுகிறார்!

தன் நலனுக்காக பிறரைக் கஷ்டப்படுத்தியதில்லை!

உண்மை, கண்ணியம், பரிசுத்த இயல்பு. உயர்வான சிந்தனை, மேலான மனிதத் தன்மை இவற்றின் முன்மாதிரியாக விளங்குகிறார்! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். துருவித் துருவி ஆராய்ந்தாலும் அவரின் வாழ்வில் சிறு களங்கமும் காணப்படுவதில்லை! இப்படி 23 ஆண்டுகள் முரண்பாடு இல்லாத மனித குலத்துக்கே முன்மாதிரியான வாழ்க்கை நெறியை சொல்லாலும், செயலாலும் தானும் பின்பற்றி வாழ்ந்து காட்டினார்.

தனது பிள்ளைகளை அறிவது போல்...
கேஜி வகுப்பில் படிக்கும் தன் மகன், அல்லது மகளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரச் செல்லும் ஒரு தந்தை அங்கே எத்தனை லட்சம் குழந்தைகள் இருந்தாலும் சரியே! அந்தக் கூட்டத்தில் தன் பிள்ளையை அறிந்து கொள்வார். அதுபோல், கேஜி வகுப்பில் படிக்கும் தன் பிள்ளைக்கு உணவு கொண்டு செல்லும் ஒரு தாய், அங்கே எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் தன் பிள்ளையை சரியாக அடையாளம் கண்டு, தன் பிள்ளைக்கே உணவை ஊட்டிவிட்டுத் திரும்புவார். அதாவது எவ்வளவு கூட்டத்திலும் தம் பிள்ளைகளை அடையாளம் கண்டு கொள்வதில் எந்தப் பெற்றோருக்கும் எவ்வித சிரமும் இருக்காது.

பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அறிவது போன்றே முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்பதையும் அறிந்திருந்தார்கள். அவர்களை நோக்கி திருக்குர்ஆன் இப்படிப் பேசுகிறது...

''நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தம் பிள்ளைகளை அறிவதைப் போன்று இவரை அறிவார்கள். ஆயினும், அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்''. (திருக்குர்ஆன், 002:146)

பெரும் மக்கள் வெள்ளத்திலும் தன் மகனைக் காணும் ஒருவர், அவன்தான் தன் மகன் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அறிந்து கொள்வார். அப்படி தனது பிள்ளைகளை அறிவது போன்று, முஹம்மது அவர்களையும் நபியென்று முந்தைய வேதக்காரர்கள் அறிவார்கள் என்று இங்கு சொல்லப்படுகிறது. முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள், இறைத்தூதர் என்பதை மிகச் சரியாக அறிந்து கொண்டார்கள் என்பதற்கான சான்றுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

...''அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்கள்''

இது எந்த அளவுக்கு உண்மையான வார்த்தைகள் என்பதற்கு, முஹம்மது அவர்களை ஒரு இறைத்தூதர் என்று நன்கு அறிந்திருந்தும், ஒரு பிரிவினர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிரியாகக் கருதி பகைமைப் பாராட்டி வந்தார்கள் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று...

''நான் எனது தந்தைக்கும், தந்தையின் சகோதரருக்கும் பிரியமான பிள்ளையாக இருந்தேன். அவர்களின் மற்ற பிள்ளைகளுடன் நான் இருந்தால் அவர்கள் என்னையே தூக்கிக் கொஞ்சுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குபாவில் அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாரின் வீட்டில் தங்கினார்கள். அப்போது அதிகாலையிலேயே எனது தந்தை ஹை இப்னு அக்தபும், தந்தையின் சகோதரர் அபூ யாஸிர் இப்னு அக்தபும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சூரியன் மறையும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் வீடடிற்குத் திரும்பும் பொழுது முகம் வாடியவர்களாக, களைத்தவர்களாக, சோர்ந்தவர்களாக வந்தார்கள். எப்போதும் போல உற்சாகத்துடன் நான் அவர்களிடம் ஓடி வந்தேன், ஆனால் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையினால் அவர்களில் எவரும் என்னைத் திரும்பிப் பார்க்கவில்லை.

சிறிய தந்தை: ''இவர் அவர்தானா?'' (அதாவது நாம் இப்போது சந்தித்தவர் நமக்கு தவ்ராத்தில் இறுதித்தூதர் என்று அறிவிக்கப்பட்டவர்தானா?)

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆம்!''

சிறிய தந்தை: ''அவரை உமக்கு நன்றாகத் தெரியுமா? உன்னால் அவர்தான் என்று உறுதியாகக் கூறமுடியுமா?''

எனது தந்தை: ''ஆம்!''

சிறிய தந்தை: ''அவரைப் பற்றி உனது உள்ளத்தில் என்ன இருக்கிறது?''

எனது தந்தை: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமைக் கொள்வேன்''


உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்கள் யூதராக இருந்த தனது தந்தை ஹை இப்னு அக்தபின் மன நிலையைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்கள். (நூல், இப்னு ஹிஷாம்)

உம்முல் முஃமினீன் ஸஃபியா (ரலி) அவர்களின் தந்தையாகிய ஹை இப்னு அக்தபுக்கும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் ஏதாவது பங்காளித் தகராறு இருந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையா? இது எதுவுமே இல்லாமல், முஹம்மது (ஸல்) அவர்களை இதற்கு முன்னால் பார்த்திருக்கக்கூட இல்லை. அன்றுதான் மதீனாவுக்கு வந்திருக்கிறார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனா வந்த அன்றே அவர்களை சந்தித்து பேசியதில் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிந்து கொள்கிறார்.

முஹம்மது (ஸல்) அவர்கள், ஒரு இறைத்தூதர் என்பதற்காக மட்டுமே ''நான் உயிரோடு இருக்கும் காலம் வரை அவரிடம் பகைமை கொள்வேன்'' என்று ஹை இப்னு அக்தபு கூறுகிறார் என்றால் அவருடைய மன நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதக் காரணமுமின்றி இது போன்ற பகைவர்கள் இன்னும், இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் இருக்கத்தான் செய்வார்கள்.

இறைத்தூதரை உண்மைப்படுத்தும் முந்தைய இறைத்தூதர்.

''இஸ்ராயீல் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பட்ட அல்லாஹ்வின் தூதர்! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹ்மத்' என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் குமாரர் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக.. (திருக்குர்ஆன், 061:006)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி முந்தைய இறைத்தூதர்களால், முந்தைய வேதங்களில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டு, அந்த முன்னறிவிப்பின் காரணமாக, முஹம்மது நபி அவர்களை ஏற்றுக் கொள்வதில் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன பகுதியிலிருந்து யூதர்கள், ''தய்யிபா என்ற மதீனா'' நகரில் குடியேறினார்கள். அவ்வாறு குடியேறியவர்களின் வாரிசுகளில் பலர், முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனா வந்தபோது அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டனர். சிலர் இறைத்தூதர் என அறிந்து கொண்டே முஹம்மது (ஸல்) அவர்களை மறுத்தனர்.

இறைத்தூதர் என எற்றுக் கொண்டவர்களும், முஹம்மது (ஸல்) அவர்களை ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். ஒரு சாரார், இறைத்தூதர் என்பதை அறிந்து கொண்டதாலேயேயும் அவர்களைப் புறக்கணித்து, முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர் என்பதை உண்மைப்படுத்தினார்கள். புறக்கணித்தவர்கள் தங்களை மேட்டுக் குடியினர் என்று சுயப் பிரகடனப்படுத்திக் கொண்டதால் அந்த உயர்குடியில்தான் தூதர்கள் வருவார்கள் என நம்பிய இறுமாப்பினால் அறிந்து கொண்டே மறுத்தனர்.

இன்றைய முஸ்லிம்கள்.
இன்றைய முஸ்லிம்கள், முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள் என்றால் அது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல. மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு இறைத்துதூதர் என்பதற்கான வலுவான சான்றுகள் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த சான்றுகளும் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை! முஹம்மது நபி இறுதி இறைத்தூதர் என்பதால் இதன் பிறகு எந்த நபியின் வருகையும் இல்லை என உறுதியாகி, இன்றைய முஸ்லிம்களுக்கு இனியொரு நபியை அடையாளம் காணும் அவசியமும் இல்லாமல் போய் விட்டது.

உலக முடிவு நாள் நெருக்கத்தின் அடையாளமாக ''தஜ்ஜால்'' (கிறிஸ்தவ மதத்தினர் ''அந்தி கிறிஸ்து'') எனும் வழிகெடுப்பவன் தோன்றுவான் என்று அவனைப் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றன இதுவும், இது போன்ற இன்னும் பல அடையாளங்களையும் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களை இஸ்லாம் அறிவிக்கின்றது. இவைகளே இன்றைய முஸ்லிம்களும், உலக முடிவு நாள்வரை வரவிருக்கும் முஸ்லிம்களும் மிக முக்கியமாக அறிந்து கொள்ள வேணடிய விஷயங்களாகும். இது தவிர, ஏற்கேனவே இறைத்தூதரை நம்பிக்கைக் கொண்டவர்களைப் பார்த்து, ''நீங்கள் இறைத்தூதரை எப்படி அறிந்து கொள்வீர்கள்?'' என்று கேட்பது மிகவும் அபத்தமானது.

இதற்காக, ''நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.'' என்று சொல்வதும் அறியாமை!

நன்றி!
அன்புடன்,
அபூ முஹை

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.

RASMIN M.I.Sc
 குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.
இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.
 முஸ்லீம்களும், திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு
இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.
ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.
o வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.
o வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
o ரமளான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.
o மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.
o குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
o குர்ஆனை உளூ செய்து விட்டுத்தான் தொட வேண்டும், உளூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.
ஆனால் திருமறைக் குர்ஆனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை?
திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும், அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள்.
 ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்
திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.
நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம், புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று பதிலளித்தோம். "உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா? அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும், அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
வேதப் புத்தகமாக, வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன், பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள், தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே?
 எந்த வேதத்திற்கும் இல்லாத "எழுத்துக்குப் பத்து நன்மை" என்ற பெருமை
திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
"அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.
இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்?
 வானவர்களுடன் இருக்கும் மனிதராக....
இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.
நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.
குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள் : முஸ்லிம், திர்மிதி)
 நீங்கள் எலுமிச்சையானவரா? பேரிச்சையானவரா? அல்லது குமட்டிக் காயானவரா?
நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும், தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும், தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்று, சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது. (அறிவிப்பவர்: அபூமூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5020)
 பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்
இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம், பொறாமைப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5025)
திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.
 அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்
அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.
"அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை, மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக்குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
http://rasminmisc.blogspot.in/

மறுமணத்தை ஊக்குவிப்போம்!



[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]
உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.
இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.
கணவனை இழந்து மறுமணம் செய்ய முடியாமல் இல்லறத்திற்காக ஏங்கி நிற்கும் மனவேதனை ஒருபுறம், சமூகத்தவர்களால் தனக்கு ஏற்படும் அவமானம் மற்றொரு புறம். இதனால் சிலர் வாழ்நாள் முழுவதும் தான் வாழத்தான் வேண்டுமா? என தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலை. இன்னும் சிலரோ ‘இருப்பதைவிட இறப்பதே மேல்’ என தானாகவே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். மற்றும் சிலரோ மறுமணம் செய்ய முடியாததால் இல்லறத்தை நோக்கி அலைபாயும் எண்ணங்களைத் தணித்துக்கொள்ள தவறான வழியில் வாழ்வைத்தேடி புதைகுழியில் விழுகின்றனர்.
இத்தனை இழிநிலைகளும் கணவன் இறந்தபின் வாழாவெட்டியாக உயிர் வாழ்வதால்தானே ஏற்படுகிறது! எனவே இதற்கெல்லாம் வழிகொடுக்காமல் கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை என்ற பெயரால், அவளையும் சாகடிக்கும் கொடுமையை இன்றும் அவ்வப்போது வடநாட்டின் சில இடங்களில் காணத்தானே செய்கிறோம். பெண்களின் வாழ்வுரிமையை திட்டமிட்டல்லவா பறிக்கிறது இக்கொடிய பழக்க வழக்கங்கள்!
ஆணும் பெண்ணும் ஒருமனதாக திருமணம் செய்து இல்லறத்தின் இன்ப துன்பங்களில் சமமாக பங்கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது கணவன் இறந்தால் மட்டும் பெண்ணாகிறவள் உடன்கட்டை ஏறவேண்டும். இதே மரணம் மனைவிக்கு முன்னதாக ஏற்பட்டால் எந்த கணவனாவது உடன்கட்டை ஏறியதாக எங்காவது கேள்வி பட்டிருக்கோமா? அவன் ஏன் மனைவியுடன் உடன்கட்டை ஏறப்போகிறான். மனைவி இறந்தவுடன் புதுமாப்பிள்ளை எனும் அங்கீகாரம்தான் அவனுக்குக் கொடுக்கப்படுகிறதே! பெண்ணினம் கொடுமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறென்ன வேண்டும்?
கணவனை இழந்ததை தன் வாழ்வில் ஏற்பட்ட பெரிய இழப்பாகக் கருதி மற்றொரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு சமூகக் கொடுமைகளுக்கு எதிராக நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு பெண்ணுக்கு கவுரவமா? அல்லது கொடுமைக்கார மனிதர்களுக்கு அஞ்சி கேழைத்தனமாக உயிரைக் கொடுப்பது கவுரவமா? இவை அனைத்திற்கும் முடிவு கட்ட வேண்டும்.
இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கொடுமைகளுக்குச் சாவுமணி அடித்தது. ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.
இதுபற்றி அல்லாஹ் திருமறையில், ‘இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணையில்லா (ஆடவர் பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்ஸ’ (அல்குர்ஆன் 24:32)
மேலும் திருமறையின் 2 ஆவது அத்தியாயத்தின் 234 ஆவது வசனத்தில், ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும். இந்த தவணை பூர்த்தியானதும் (தங்கள் நாட்டத்திற்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் முறைப்படி எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவனாக இருக்கின்றான்.’ என்று அல்லாஹ் அனுமதியளிக்கின்றான்.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையும் (கர்ப்பத்தை அறியும் மூன்று மாத) தவணைக்காலம் முடிந்ததும் மறுமணம் செய்துக் கொள்வதை தடுக்கக்கூடாது என்று அல்லாஹ் திருமறையின் 2:23 ஆவது வசனத்தில் எச்சரிக்கையும் செய்கின்றான். இத்திருமறையின் வசனத்திற்கு விளக்கமளிக்க வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களின் வாழ்வுரிமையை நிலைபெறச்செய்ய மறுமணத்தை செய்து கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். இதனை வழிகாட்டியாக ஏற்ற உத்தம நபித்தோழர்களும் இப்புரட்சியைச் செய்துள்ளார்கள்.
பெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர். அந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை. பெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.
‘அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’ என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது. ஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.
இந்நிலையில் துணையில்லாமல் வாழ்வது, அதுவும் காணும் இடமெல்லாம் இச்சையைத்தூண்டும் அத்தனை வாசல்களும் திறந்துவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில் துணை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்வது கடமை என்றே கூட சொல்லலாம். காரனம் அது அவர்களது கற்புக்கு பாதுகப்பாக அமையுமல்லவா?
இனிமேலும் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கக்கூடாது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்தும் ஆணினத்தைப் போன்று பெண்ணும் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவள்தான். ஆண்களைப் போன்ற உணர்வகளும், வாழும் ஆசைகளும் அவளுக்கும் உண்டு என உணர்த்த வேண்டும்.
விதவைப் பெண்களை இழிவுபடுத்துபவர்களைச் சட்டம் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அவர்கள் மறுமணம் செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்திட உரிமை கொடுக்க வேண்டும். மேலும் உலகிலுள்ள அனைவரும் பெண்களின் உரிமைகளைப் பேணும் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வெண்டும்.
தன்னால் விவாகரத்துச் செய்யப்பட்டு முடிந்து போன அதே பெண்ணை மீண்டும் (மறுமணம்) மணந்து கொள்ள பழைய கணவனே விரும்பினால்...
தன்னால் விவாகரத்துச் செய்யப்பட்டு முடிந்து போன அதே பெண்ணை மீண்டும் மணந்து கொள்ள பழைய கணவனே விரும்பலாம். நன்றாக சிந்தித்து, பொறுமையுடன் பிரச்சனைகளை அணுகாமல் அவசரப்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்து விடுவதால் இது போன்ற நெருக்கடி ஏற்படுவதுண்டு. இச்சமயத்தில் உடனடியாக அப்பெண்ணை அவன் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஐந்து நிபந்தனைகளை அவள் பூர்த்தி செய்த பிறகே, அவன் விவாகரத்துச் செய்த அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய முடியும்.
அனைத்து வகை விதவைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இத்தா (திருமணத்துக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருத்தல்)என்றும் எதிர்பார்த்தலை அந்த முதல் மனைவி மேற்கொள்ள வேண்டும்.
இத்தா காலம் முடிந்தபின் அப்பெண் வேறொரு ஆணை மணந்து கொள்ள வேண்டும்.
o அந்தக் கணவனுடன் தாம்பத்திய உறவு ஏற்பட வேண்டும்.
o பின்னர் அந்த இரண்டாவது கணவன் அவளை விவாகரத்துச் செய்ய வேண்டும்.
o மறுபடியும் அவள் இத்தா இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை முறையாக செய்து முடித்து பிறகே மறுமணம் நடைபெற முடியும். முதலில் இழந்த பெண்ணை அவன் மீண்டும் மனைவியாக்க முடியும். இந்த நெருக்கடி வந்து விடக்கூடாது என்பதற்காகவே, விவாகரத்து விடயத்தில் அவசரம் கூடாது என்றும், கணவன், மனைவி இடையே பொறுமை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, எல்லாவற்றையும் விட இறையச்சம் அவசியம் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
இஸ்லாத்தில் கணவன் இறந்து விட்டால் மணைவி இத்தா இருக்கிறாள் அதே மணைவி இறந்தால் மட்டும் கணவன் இத்தா இருப்பதில்லையே ஏன்?
இஸ்லாம் மார்க்கத்தில் மணைவி இறந்து விட்டால் அடுத்த நாளே கணவன் மறுமணம் செய்து கொள்கிறான்.அது போன்ற சட்டம் பெண்ணிற்கு இல்ல்லையே ஏன்?
ஒரு ஆண் தன் மனைவியை இழந்துவிட்டால் உடனேயே அவன் இன்னொரு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டால் அவள் அடுத்த நாளே மறுமணம் செய்ய முடியாது. சில நாட்கள் திருமணத்தை ஒத்திப் போட வேண்டும். மறுமணத்தை ஒத்திப்போடும் காலமே இத்தா எனப்படுகின்றது.
எவ்வளவு காலம் திருமணத்தை ஒத்திப்போட வேண்டும் என்பது பல விதங்களில் வித்தியாசப்படும்.
''கர்ப்பிணிகள் (மறுமணத்திற்காக) காத்திருக்கும் காலம் அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும்''. (அல்குர்ஆன் 65:4)
கணவனை இழக்கும்போது அவள் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் எட்டு மாதங்கள்) அவற் மறுமணம் செய்யலாகாது. கணவனை இழக்கும் போது அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை (சுமார் ஏழெட்டு நாட்கள்) அவள் மறுமணம் செய்யலாகாது.
கணவனை இழக்கும் சமயத்தில் அவள் கர்ப்பிணியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருந்தால் அவள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்த வேண்டும். இந்தக் காலகட்டம் முடியும் போது அவள் கர்ப்பிணியாக இல்லை என்று உறுதியானால் உடனே அவள் திருமணம் செய்து கொள்ளலாம். இந்தக் காலகட்டம் முடிவுறும் போது அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தால் அவள் பிரசவிக்கும் வரை மீண்டும் திருமணத்தை தாமதப்படுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் யாவும் 65:4 வசனத்தையும் 2:234 வசனத்தையும் ஆராய்ந்தால் விளங்கும்.
இந்தக் காலகட்டம் பெண்ணுக்கு வித்தியாசப்படுவதைக் கவனிக்கும் போது இத்தாவின் நோக்கம் என்ன என்பது தெரியும்.
அதாவது ஒருவனுடைய கருவைச் சுமந்து கொண்டு அடுத்தவனை மணக்கக் கூடாது. கரு வளர்கிறதா இல்லையா என்று சந்தேகமான நிலையிலும் அடுத்தவனை மணக்கக் கூடாது. முதல் நிலையில் இறந்தவன் துரோகம் செய்யப்படுகிறான். இரண்டாம் நிலையில் புதிய கணவன் ஏமாற்றப்படுகிறான். எல்லா வகையிலும் ஏமாற்றுவதைத் தடை செய்த இஸ்லாம் இங்கேயும் அதற்குத் தடை விதித்திருக்கின்றது.
ஒருவன் தன் மனைவியுடன் சேர்ந்து அவள் கர்ப்பிணியாக காரணமாக இருக்கிறான். அவளது கருவறையில் வளரும் தனது குழந்தையை அவள் வளர்ப்பால் என்று எதிர்பார்க்கிறாள். அவளும் இதற்கு உடன்பட்டே அவனுடன் இணைகிறாள். இதைப் பச்சையாக சொல்லாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்திலேயே இது அடங்கி விடுகின்றது.
இந்த நிலையில் அவன் இறந்து விடும்போது அவனது குழந்தையைப் பெற்றெடுப்பதும், அதற்கு இடையூறு ஏற்படாமல் காப்பதும் அவளது கடமையாகின்றது. அவள் கர்ப்பிணியாக உள்ள நிலையில் மற்றொருவனை மணக்கும் போது அந்த குழந்தை பாதுகாப்பற்ற நிலைக்கு வருகிறது.
கர்ப்பிணியா இல்லையா என்று தெரியாத நிலையில் கணவனை இப்ந்த உடனே அவள் மறுமணம் செய்தால் ஒருவேளை முதல் கணவன் மூலம் குழந்தை உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் தனக்குச் சம்பந்தமில்லாத குழந்தைக்கு மற்றொருவன் தந்தையாக்கப்படும் மோசடி ஏற்படுகின்றது. இவனது சொத்துக்களுக்கு இவனுக்குப் பிறக்காதவன் வாரிசாகும் நிலை ஏற்படுகின்றது. இது போன்ற நிலையை நீக்கி, உயர்வான நோக்கங்கள் இத்தாவின் பின்னே இருப்பதை சிந்திக்கும் போது விளங்கலாம்.
அப்படியானால் குழந்தை பெற முடியாத முதிர் வயது அடைந்தவளும், கணவனுடன் நீண்ட நாட்கள் உறவு கொள்ளாமல் இருந்தவளும் ஏன் இத்தா இருக்க வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும்.
"இத்தா' என்றால் மறுமணம் செய்வதை தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்னரே குறிப்பிட்டோம். முதிர் வயதுடையவள் எப்போதுமே மறுமணம் செய்யப் போவது கிடையாது என்பதால் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் மறுமணம் செய்யக் கூடாது என்பதால் அவளுக்கு எந்த இடையூறும் கிடையாது.
அவள் மறுமணத்தை விரும்பக் கூடியவளாக இருந்தால் அந்த வயதிலும் அப்போது இந்தக் காலக்கெடு அவசியமாகி விடுகின்றது. இல்லற வாழ்வில் தேற்றம் இருக்கும். அவள் குழந்தை பெறுவதற்கும், முதல் கணவன் மூலம் கருத்தறிப்பதற்கும் சாத்தியம் ஏற்பட்டு விடுகின்றது. இவள் வயதில் முதியவளாக இருந்தாலும் உடற்கட்டிலும் உணர்விலும் முதியவள் அல்ல. "இத்தா' என்பதை இருட்டறையில் அடைந்து கிடப்பது என்று சிலர் விளங்கியதால் கிழவிக்கு ஏன் இத்தா? என்கின்றனர்.
இத்தா என்றால் உடனே மறுமணம் செய்யாமல் தாமதப்படுத்தும் காலமே என்பதை விளங்கிக் கொண்டால் அந்தக் கேள்வி அர்த்தமற்றதாகிவிடும்.
எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாவிட்டால் ஏற்படும் மோசமான விளைவையும் சிந்திக்க வேண்டும்.
உடனேயே மறுமணத்தை விரும்பும் ஒருத்தி, தான் மாதவிடாய் நிற்கும் வயதை அடைந்து விட்டதாக பொய் சொல்லலாம். அதை மறுக்க வழியேதும் இராது. ஏனெனில் இந்தப் பருவம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படக்கூடியது.
அல்லது ஒரு பெண் விதிவிலக்காக முதிர் வயதிலும் தாயாகி விடக்கூடும். உலகில் ஆங்காங்கே இது நடக்கத் தான் செய்கிறது. இப்படி விதிவிலக்காக முதல் கணவன் மூலம் முதிர் வயதில் அவள் கருத்தரித்திருந்தால் இரண்டாவது கணவன் ஏமாற்றப்படுகிறான். இதையெல்லாம் தவிர்ப்பதற்காக எவராக இருந்தாலும் நான்கு மாதங்கள் பத்து நாட்கள் "இத்தா' இருக்க வேண்டுமென இஸ்லாம் சட்டத்தைப் பொதுவாக்கியது. கணவனுடன் நீண்ட நாட்களாக உறவு இன்றி இருந்தவள் ஏன் இத்தா இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். அதுவும் நிரூபிக்க முடியாததாகும். இதில் சலுகை வழங்கினால் அவசரத் திருமணத்திற்கு ஆசைப்படும் பெண் தனக்கு கணவருடன் பல ஆண்டுகள் உறவு கிடையாது என்று கூறலாம். இதை மறுக்க எந்த வழியும் இல்லாது போகும். இது போன்ற ஓட்டைகள் சட்டத்தில் இருந்தால் இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவிடும் என்பதை நாம் விளங்கலாம். இந்தக் காரணங்கள் "அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியவை அல்ல. நாம் சிந்திக்கம் போது தோன்றியவை. காரணங்கள் நமக்குத் திருப்தியளிக்காவிட்டாலும், காரணமே நமக்குத் தெரியாவிட்டாலும் இறைச்சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.
"இத்தா' என்றால் மறுமணம் செய்வதைத் தாமதப்படுத்தும் காலம் என்பதை முன்பே நாம் கூறியுள்ளோம். அவள் மறுமணம் செய்யாமலும், அந்தக் காலகட்டத்தில் திருமண எண்ணத்தை ஏற்படுத்தும் அலங்காரகங்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும். அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்லக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. வீட்டுக்குள்ளே இருட்டறையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதும் இத்தாவின் அர்த்தமில்லை.
தலாக் விடப்பட்ட பெண்களும் இத்தா இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம். இவர்கள் இந்தக் கட்டத்தில் சர்வ சாதாரணமாக வெளியே வருகின்றனர். ஆனால் கணவன் இறந்த பிறகு இத்தா இருக்கும் போது மார்க்கம் கூறாத கட்டுப்பாடுகளை விதித்து விட்டனர்.
தலாக் விடப்பட்டவர்களுக்கு கணவன் இத்தா காலத்தில் செலவு செய்யக் கடமைப்பட்டுள்ளான். வெளியே செல்வதை அவன் தடுப்பதில் ஓரளவு நியாயம் உண்டு. ஆனால் கணவனை இழந்தவளை அப்படித் தடுக்கத் தேவையில்லை.
அதையே அனுமதிப்பவர்கள் இதை மறுப்பது தான் விந்தையாக உள்ளது. இத்தா இருப்பவள் அவசியத்தை முன்னிட்டு வெளியே செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை
கணவனை இழந்த பெண் விரும்பினால் இத்தா தவணை முடிந்தவுடன் மறுமணம் செய்துகொள்ள பெண்ணுரிமை :
உணர்வுகள் இருபாலினருக்கும் பொதுவானது அதில் ஏற்றத்தாழ்வு எதுவுமில்லை. என இஸ்லாம் பறைசாற்றியதோடு, விவாக விலக்கு செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்த ஒரு பெண் விரும்பினால் இத்தா தவணை முடிந்தவுடன் மறுமணம் செய்துகொள்ள பெண்ணுரிமை வழங்கிய ஒரு சம்பவம்:
என் தந்தை அப்துல்லாஹ் இப்னு உத்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அர்கம் அஸ்ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சுபைஆ மார்க்கத்தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று) உமர் இப்னு அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்.
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு இறந்துவிட்டார்கள். அப்போது 'சுபைஆ' கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்து நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை. (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார்.
(பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான 'அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக் ரளியல்லாஹு அன்ஹு சுபைஆ அவர்களிடம் வந்து, 'திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது" என்று கூறினார்கள்.
சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, ''நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி (நூல்கள் - புகாரி 3991, 4532, 4909, 4910, 5318-5320. முஸ்லிம் 2973)
கணவர் மரணிக்கும் போது கர்ப்பமாக இருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், கணவர் இறந்து நாற்பது நாள்களில் பிரசவித்தார் என வேறு அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமெனும் இறை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மேல்கண்ட நபிவழிச் செய்தியில் பல படிப்பினை உள்ளன.
கர்ப்பிணிப் பெண்களின் இத்தாவின் தவணை காலம் பிரசவிக்கும் வரையாகும். (கருத்து: அல்குர்ஆன் 65:4) கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்குப் பின் மறுமணம் செய்துகொள்ளலாம். உதிரப் போக்கிலிருந்து சுத்தமாகும் வரைக் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. பிரசவித்தப் பிறகு ஏற்படும் உதிரப் போக்கு உடலுறவுக்குத் தடையே தவிர திருமணத்திற்குத் தடை இல்லை.
மார்க்கத் தீர்ப்பு என்று யார் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், தமக்குரிய மார்க்கத் தீர்ப்பை எங்கு பெறவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று தமக்குரிய மறுமணம் சட்டத்தைத் தெரிந்து கொள்கிறார்.
கணவனை இழந்து, பிரசவித்தவுடன் மறுமணம் செய்ய தயார்படுத்தி, பெண் பார்க்க வருபவர்களுக்காக தம்மை அலங்கரித்துக்கொண்டால் ஊராரின் இடித்துரைப்புக்கு ஆளாக நேருமே என்ற எண்ணமில்லை. - அன்றைய மக்களும் அவ்வாறு இல்லை என்பது தனிவிஷயம். - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்படாமல் இவ்வாறு எதையும் பொருட்படுத்தாது பெண்மையின் உணர்வுக்கான உரிமைக்கு இஸ்லாமின் தீர்வு என்ன? எனக் கேட்டறிந்து செயல்பட்டனர்.
இன்று இந்த சூழ்நிலையில் ஒரு பெண் இருந்து அவர் மறுமணம் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்திக்கொண்டால், - இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படைப் பெண்ணுரிமைக்கு - இந்த சமூகமே தடைகற்களாக அமைந்து பழித்துரைப்பதை எழுத்தில் வடிக்க இயலாது. எனவே மறுமணத்தை ஊக்குவிப்போம். திருமணத்தின் நறுமணம் மறுமணத்திலும் உண்டு
- இது இணையத்தில் வெளியான பல கட்டுரைகளின் தொகுப்பு.
http://www.nidur.info/
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16